புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச
- local
- January 10, 2026
- No Comment
- 17
இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும், எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கல்வி அமைச்சுக்கும் முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பாடநெறித் தொகுப்புகளில் (Modules), ஆபாச இணையதளங்கள் மற்றும் ஆபாச யூடியூப் சேனல்களுக்கான இணைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன . இது மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டியுள்ளார் .
இது தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் முயற்சி ஆகும்.இதன் மூலம் ஈட்டப்படும் பாரிய அளவிலான பணம் யாருடைய கைகளுக்குச் செல்கிறது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எந்தவொரு கல்விச் சீர்திருத்தமும் நிபுணர்களின் ஆலோசனையுடனும், முன்னோடித் திட்டங்கள் ஊடாகவும் மிகவும் அவதானமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால், எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி அவசர கதியில் இந்த சீர்திருத்தங்கள் திணிக்கப்படுவதால் இவ்வாறான மன்னிக்க முடியாத தவறுகள் இடம்பெறுகின்றன.
எனவே, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்துப் பெற்றோர்களும் எவ்வித பேதமுமின்றி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.