WI vs IND: ரோஹித், கோலிக்கு வாய்ப்பில்லை; இந்தியா தோல்வி – ராகுல் டிராவிட் சொல்லும் லாஜிக் என்ன?

WI vs IND: ரோஹித், கோலிக்கு வாய்ப்பில்லை; இந்தியா தோல்வி – ராகுல் டிராவிட் சொல்லும் லாஜிக் என்ன?

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 76

இந்திய அணியின் தோல்வி குறித்தும் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்தும் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையிருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதால் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஸர் பட்டேல் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொதப்பியது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 55 ரன்களும், சுப்மன் கில் 34 ரன்களும், சூர்யகுமார் 24 ரன்களும் எடுத்திருந்தனர். இதையடுத்து அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்று தற்போது சமநிலையில் உள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருந்த சூர்யகுமார் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்தும் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்தும் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

Rahul Dravid

இதுபற்றி பேசியுள்ள அவர், “சூர்யகுமார் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. துரதிர்ஷ்டவசமாக, டி20 மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அளவுக்கு, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை. இதை முதல் ஆளாக அவரே ஒப்புக்கொள்வார்!

ஐபிஎல் தொடர் மூலமாக நிறைய டி20 போட்டிகளில் விளையாடி, அனுபவங்களைப் பெற்றவர் அவர். இதுவரை ஒருநாள் போட்டிகளில் அவர் பெரிதாக விளையாடியதில்லை. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஒருநாள் போட்டிகள் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், ஒருநாள் போட்டிகளில் எப்படி ஆடவேண்டும் என்பதை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று வருகிறார் என நம்புகிறேன். மிடில் ஓவர்களில் எப்படி விளையாடுவது எனப் புரிந்துகொண்டு வருகிறார். சூர்யகுமாரிடம் திறமை இருக்கிறது. எனவே அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் வழங்குவோம்” என்று கூறினார்.

virat and rohit

மேலும், விராட் கோலி மற்றும் ரோஹித் அணியில் இடம்பெறாதது குறித்துப் பேசிய டிராவிட், “உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் என மிக முக்கியமான தொடர்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் இருவரும் தயாராக வேண்டும். இதற்கிடையில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவர்களால் சரியாக விளையாட முடியாமல் போய்விடும். அதனால் அவர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வளர்ந்துவரும் அடுத்த இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அவர்களின் ஆட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்” என்று கூறினார்.

இதனிடையே ரோஹித், கோலி அணியில் இடம்பெறாததால்தான் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

 

Related post

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…
வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

நடப்பு ஐ.பி.எல் சீசனில்குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு…

Leave a Reply