
யாழ். சுழிபுரம் முருகன் ஆலயத்தில் அரச மரம்..! வெடித்தது புதிய சர்ச்சை
- local
- August 3, 2023
- No Comment
- 28
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
யாழ்ப்பாணம் – சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?
குறித்த தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
யாழ். சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரமானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த சங்கமித்தாவின் அரச மரம் என வர்ணிக்கப்பட்டு அரச வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் குறித்த அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து, புத்தர் சிலைகளை நிறுவி, முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்தாக தெரியவருகிறது.
அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தேரர்கள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்த போது இதற்கு பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021