நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் சிறப்பு

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் சிறப்பு

  • local
  • May 8, 2025
  • No Comment
  • 56

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கையாழ்ப்பாண மாவட்டத்தில்நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்

இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் இங்கு தங்கிச்செல்வோரே அதிகம். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.

நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…